Visitors have accessed this post 761 times.

உறவுகள் பகுதி -1 RELATIONSHIPS part-1

Visitors have accessed this post 761 times.

 

                           உறவுகள்   RELATIONSHIPS 

 

காதலர்களுக்கு இடையேயான உறவு முறைகள் 

Relationship patterns between lovers

கணவன் மனைவிக்கு இடையேயான உறவு முறைகள் 

Relationship patterns between husband and wife

உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் காதலர்களுக்கும் கணவன் மனைவிகளுக்கு  சமர்ப்பணம் செய்கிறேன். 

I dedicate to lovers and husbands and wives living around the world.

காதலர்கள் உறவு முறைகள் :

இந்த கலியுகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் அபூர்வமான ஒரு விஷயம் தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பதுதான் காதல்.

அந்தக் காலத்து காதல், இந்தக் காலத்துக் காதல் என பிரித்துப் பார்க்க நான் விரும்பவில்லை. எந்தக் காலத்துக் காதலாக இருந்தாலும், காதல் உண்மையானதாக உள்ளதா என்பதே முக்கியம். இருந்தாலும், 2021-ல் எனது இந்த கருத்துக்களை உணர்வுடன் இங்கே பகிர்வதால், இந்தக் காலத்துக் காதலைப் பற்றியே பேச விரும்புகிறேன்.

 

தினம் தினம் நாம் பல பெண்களை நம் வாழ்வில் கடந்து செல்கிறோம். அவர்களில் அழகாக இருப்போர் அனைவரும் நம்மை திரும்பிப் பார்க்க வைப்பார்கள். திரும்பி இரண்டு நொடி பார்ப்பதோடு நமது பணி முடிந்துவிடும். முடிந்து விட வேண்டும். அந்த அழகான பெண்களில் சிலர் மட்டும் அன்றைய சில மணி நேரங்களுக்கு அவர்களைப் பற்றி நம்மை சிந்திக்க வைப்பர். அந்தளவிற்கு நம்மை கவர்ந்திருப்பர்.

 

இங்கே அழகைப் பற்றி நான் ஏன் பேசுகிறேன் என்றால், பெரும்பாலான இன்றைய காதல் அழகை நோக்கித் தான் செல்கிறது. நான் ஏன் அந்தப் பெண்ணை காதலிக்கிறேன் என விட்டத்தைப் பார்த்து கேள்விக் கேட்டால், ஆண்களின் மனசாட்சி சொல்லும் பதில், ‘அவள் அழகாக இருக்கிறாள்’ என்பதுதான். ஆனால், அதனை ஒப்புக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. உங்களில் எத்தனை பேர் உங்கள் காதலியின் அழகைப் பார்த்து விரும்பியிருக்கிறீர்கள்? ஒப்புக் கொள்வீர்களா? முடியாது. ஏனெனில், அதை ஒப்புக் கொண்டால், அங்கே காதல் பிரிந்துவிடும்.

 

அழகு என்பது என்ன? அழகின் எல்லை என்பது என்ன? இப்போ ஒரு பூ அழகாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோமே.. சிலர் அந்தப் பூவை பறித்து விடுவார்கள். சிலர் அதனை தொட்டுப்பார்த்து விலகிச் சென்று விடுவார்கள். அந்த ‘தொட்டுப் பார்த்து விலகிச் செல்வது’ தான் இன்றைய நவநாகரீக இளசுகளின் பெரும்பாலான காதலின் நிலைமை. அவர்களுக்கு அழகை அனுபவிக்க வேண்டும். அதனை அனுபவித்துவிட்டால், இயற்கையாகவே அதன் அழகு சலித்துவிடும். இதைத்தான் காதலென்ற பெயரில் பலர் இன்று செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இங்கே யாரையும் குறை சொல்ல நான் விரும்பவில்லை. ஏனெனில், நானும் அந்த வயதைக் கடந்து வந்தவனே. நான் இங்கு சொல்ல விரும்புவது, ‘காதல் என்றால் என்ன?’ என்று என் இளைஞர்களுக்கு புரிய வேண்டும். அவ்வளவுதான்.

காதல் என்றால் என்ன?

இந்த உலகில் வாழ, மனிதராய் பிறந்த நமக்கு எப்போதும் ஒரு துணை தேவை. நம்மை பெற்று, வளர்த்துவிடும் பெற்றோர்கள் நமது குறிப்பிட்ட வயதுவரை தான் துணை நிற்க முடியும். அதற்குமேல் நமக்கு நம்பகத்தகுந்த, அன்பு, அக்கறை செலுத்தக்கூடிய உயிர் ஒன்று தேவை. ஆணுக்கு ஒரு பெண். பெண்ணுக்கு ஒரு ஆண். பெற்றோரிடம் நாம் செலுத்தும் காதல் என்பது குடிநீரும், கண்ணீரும் போல… இரண்டும் ஒன்று போல் இருந்தாலும், அவை வேறுவேறு தான். ஆனால், ஆணுக்கும் – பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும் குடிநீரும் போல…ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

 

இந்த வேறுபாட்டைத் தான் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கடைசி வரை ஒரு உயிர் எந்தவித சுயநலமுமின்றி நம்முடன் பயணிக்க வேண்டுமென்றால், காதல் எனும் ஆயுதம் அதற்கு தேவை. இப்படி கடைசி வரை ஒருவருக்கொருவர் துணையோடு வாழவேண்டுமெனில், அந்தக் காதல் எவ்வளவு ஆழமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும் என நினைத்துப் பாருங்கள். இந்த இடத்தில் அழகிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் அந்த காதல் நிலைக்குமா? அவர்கள் உங்களுடன் கடைசிவரை கூட வருவார்களா?

 

எப்போது காதல் வருவது நல்லது?

இது ஒரு முக்கியமான கேள்வி. “நான் பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை. 20 வயதிலேயே வேலைக்கு சேர்ந்துவிட்டேன். இப்போது நான் சுயமாக சம்பாதிக்கிறேன். நான் தாராளமாக காதலிக்கலாம்” என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒரு ஆண் 25 வயதில் காதல் வயப்பட்டான் என்றால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில், சம்பாதித்தால் மட்டும் போதாது. குடும்பம் என்றால் என்ன? அதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது? திருமணம் செய்தால் மனைவியின் குடும்பம் மற்றும் தமது பெற்றோரை எப்படி அனுசரித்து செல்வது என்பது போன்ற பல உறவு சிக்கல்கள் குறித்து அந்த காலக்கட்டத்தில் தான் புரிய ஆரம்பிக்கும்.

 

எனவே, அப்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு துணை…அதாவது காதல், நிச்சயம் உங்கள் வாழ்வில் உண்மையாக சங்கமிக்கும். உங்கள் உடலுக்கும், மனதுக்கும் அது மகிழ்ச்சியைத் தரும்.

 

இதைவிடுத்து, காதலியை பின்னால் உட்காரவைத்து துப்பட்டாவை தலையில் சுற்றி மறைத்து அழைத்துச் செல்வது, ஓடாத படத்திற்கு கார்னர் சீட்டில் சென்று காதலியுடன் உட்காருவது, அடிக்கிற வெயிலில் பீச்சில் சென்று மறைந்து கொள்வது போன்றவற்றிற்கு பதில் தைரியமாக விபச்சார விடுதிக்கு சென்றுவிடலாம். இதனால், நமது நேரம், பணம், உழைப்பு போன்ற அனைத்தும் மிச்சமாகும் பாருங்கள்.  

இதயத்தின் மொழி  துடிப்பென்றால்..  

நான் உனக்காக  துடிப்பதை.. 

உலகின் வேறு 

எந்த மொழியாலும்.. 

உனக்கு விளக்கிட முடியாது!

கணவன் மனைவி உறவு முறைகள் :

ஆண், பெண் திருமண பந்தத்தில் இணையும் பொழுது எல்லோருமே பல்வேறு கனவுகளுடன் தான் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஆனால் சிறிது காலம் போன பிறகு தான் உண்மையான குணநலன்கள் வெளிப்படுகிறது. இது காதலித்து திருமணம் செய்பவர்களுக்கும் பொருந்துகிறது என்பது நான் ஆச்சரியப்படத்தக்க விஷயமாக உள்ளது. காதலிக்கும் பொழுதே ஆயிரம் விஷயங்களை பேசி முடித்து இருப்பார்கள். ஆனாலும் அவர்களுடைய வாழ்க்கையும் புரிதல் இல்லாமல் போவதற்கு என்ன காரணம் தெரியுமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் சரி, திருமண வாழ்க்கை தொடங்கிய பிறகு தான் உண்மையான குண நலன்கள் தெரிய வருகிறது.

 

ஆரம்பத்தில் இருக்கும் காதல் போகப் போக குறைவதால் தான் திருமண பந்தத்தை உடைக்க வைக்கிறது.

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முழுமையாக புரிந்து கொள்ளும் வரை அவர்களைப் பற்றிய கருத்துகளை முன் கூட்டியே முடிவு செய்து விடாதீர்கள். இவள் இப்படித்தான்! இவர் இப்படித்தான்! என்று முடிவு செய்துவிட்டால் அதன் பிறகு அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் தவறாகத்தான் தெரியும். உங்கள் கருத்துக்களுக்கு உங்களுடைய துணை முரண்பட்டு இருந்தாலும் ஒரு நாள் அமர்ந்து ஆரோக்கியமான விவாதமாக அதனை எடுத்து சென்றால் அந்த விஷயத்தில் இருவரில் யாருடைய கருத்து சரி என்பதை உணரவும், உணர்த்தவும் வேண்டும்.

 

அவர்கள் உணர்ந்து கொண்டாலும் உடனே திருத்திக் கொண்டு விட மாட்டார்கள். அவர்களுக்கு கால அவகாசம் கொடுத்து பொறுமையாக இருங்கள். நிச்சயமாக தன்னுடைய கருத்து தவறானது என்பதை ஒரு நாள் உணர்வார்கள். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் செய்து பார்க்கும் பொழுது தான் இருவருக்குள் புரிதலும் அதிகமாகும். இதையெல்லாம் செய்ய நேரமில்லை என்று ஒதுங்கிப் போக நீங்கள் வேறு யாரோ அல்ல.. தம்பதிகள் என்பதை முதலில் உணருங்கள்.

 

மனைவியை அல்லது கணவனை ஒரு போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. அவர்கள் எப்படி இருக்க வேண்டும்? என்கிற உங்களுடைய கருத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டு கூறாமல், நீ இப்படி இருந்தால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் தெரியுமா? என்பது போன்ற பாவனையில் எடுத்துக் கூறலாம்.

 

அவர்களை அறியாமல் எப்போதாவது உங்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டிருக்கலாம். அந்த விஷயத்தை சுட்டிக்காட்டி அன்று நீ இப்படி நடந்து கொண்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதைத்தான் உன்னிடம் எதிர்பார்த்தேன் என்று கூறலாம். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாக கூறும் பொழுது தான் புரிதல் ஏற்படும். எதிர்மறையாக கூறிவிட்டால் உங்கள் மேல் இருக்கும் மதிப்பு குறையும், அன்பும் தானாகவே மாறிவிடும்.

 

எல்லா விஷயங்களிலும் உங்கள் துணை தான் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அவர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள்? அவர்கள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? என்பதை ஒரு முறையாவது நிதானமாக அமர்ந்து சிந்தித்து பார்க்க வேண்டும். காசு கொடுக்கும் முதலாளிக்கு பிடிக்கவில்லை என்றாலும் அடிபணிந்து செல்லும் நீங்கள் உங்களுடைய மனைவிக்கு பிடித்த ஒரு விஷயத்தை அவர்களுக்காக விட்டுக் கொடுத்தால், கெட்டுப் போக மாட்டீர்கள்.

 

விட்டுக் கொடுப்பதில் தான் வாழ்க்கை அடக்கியுள்ளது. விடாப்பிடியாக இருந்தால் திருமண பந்தத்தில் இனிமையை காண முடியாது. நீங்கள் ஒரு விஷயத்தை விட்டுக் கொடுத்தால் அவர்கள் இரண்டு விஷயங்களை விட்டுக் கொடுப்பார்கள் அது தான் பெண்களிடம் இருக்கும் சூட்சுமமான குணமாகும். இதனை தெரிந்து வைத்திருந்தால் உங்கள் மனைவிக்கு நீங்கள் நல்ல கணவனாக மாறிவிட முடியும். ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன்.

 

என்னை கருவில் சுமந்த

தாயையும் என் கருவை

சுமக்கும் உன்னையும் நான்

கல்லறை செல்லும்

வரை நேசிப்பேன்.

நம்மை நாமே காதலிப்பது எவ்வளவு முக்கியம்:

நீங்கள் உங்க ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உங்களை நீங்களே காதலிப்பது மிகவும் அவசியம். உங்கள் மேல் நீங்கள் அன்பு செலுத்தும் போது உங்க மன அழுத்தம், பதட்டம் நீங்கி மன மகிழ்ச்சி அதிகமாகிறது. எனவே சுய அன்பு எவ்வளவு முக்கியம் என்பதை அறிய இந்த கட்டுரையை படியுங்கள்.

 

ஒவ்வொருவருக்கும் சுய மதிப்பு என்பது மிகவும் அவசியம். சுய அன்பு இருந்தால் மட்டுமே உங்க மன ஆரோக்கியம் மேம்படும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். நாம் அழகாக இருக்கிறோம், நம்மால் இதைச் செய்ய முடியும் போன்ற அன்பான வார்த்தைகளை உங்களுக்கு நீங்களே கூறிக் கொள்வது மிகவும் அவசியம். இது உங்கள் மீதுள்ள தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிய உதவுகிறது. ஆனால் பலர் சுய அன்பு என்பதை பெரிதாக மதிப்பதில்லை. நீங்கள் அடுத்தவரை காதலிப்பதற்கு முன்பு உங்களை நீங்களே காதலிப்பது மிகவும் அவசியம். சுய அன்பு மிக்கவர்களை மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் தொற்றாது. சுய அன்பை மறந்தவர்களுக்கு அவர்கள் மேலே ஒரு நல்ல அபிப்பிராயம் இருப்பதில்லை. எனவே உங்கள் மேல் ஏன் காதல் கொள்ள வேண்டும் என அறிந்து கொள்ளுங்கள். அதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் உண்டாகும் என அறிந்து கொள்வோம்.

 

​மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை தவிருங்கள்:

உங்களை ஏன் தேவையின்றி ஒருவருடன் ஒப்பிடுகிறீர்கள் என்று எப்போதாவது யோசித்தீர்களா?. இது ஏன் நடக்கிறது என்றால் நீங்கள் உங்களை நேசிக்காத போது அறியாமலேயே உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்கிறீர்கள். ஒவ்வொரு நபரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். எனவே உங்களுக்குள்ளும் ஏராளமான திறமை அழகு பொதிந்து கிடக்கும். அதைக் கண்டறிவது உங்க திறனை மேம்படுத்த உதவி செய்யும். உங்க சுய மரியாதையை குறைப்பது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நீங்கள் உங்களை நேசிக்க ஆரம்பித்ததும் மற்றவர்களையும் வெளிப்படையாக நேசிக்க ஆரம்பிப்பீர்கள்.

 

உங்க நம்பிக்கையை மேம்படுத்த:

உங்கள் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் எதிலும் நாட்டம் இருக்காது. உங்களால் நீங்கள் வகுத்த இலக்குகளை அடைய முடியாது. உங்கள் மீது நம்பிக்கை இல்லாதது உங்கள் உணர்வுகள், நோக்கங்கள் மற்றும் ஆசைகளை சந்தேகிக்க வைக்கும். உங்க குறைபாடுகளை நீங்கள் ஏற்றுக்கொள்வது நல்லது என்றால் கூட எல்லா குறைபாடுகளையும் ஏற்றுக் கொள்வது நல்லது அல்ல. உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்க சந்தேகம் முற்றுப்புள்ளிக்கு வரும். உங்க எதிர்காலம் குறித்த சிறந்த திட்டங்களை வகுப்பீர்கள். அது உங்க மகிழ்ச்சியை அதிகரிக்கும். எனவே உங்க மனம் நிம்மதி பெற சுய அன்பை மேம்படுத்துங்கள்.

 

​உங்க தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள்:

தோல்வி மற்றும் குழப்பம் இரண்டும் வாழ்க்கையின் ஒரு பகுதிகள் என்று புரிந்து கொள்ளுங்கள். உங்களை நேசிப்பது உங்களிடம் உள்ள சாத்தியக்கூறுகள் மற்றும் தேர்வுகள் குறித்து மேலும் விழிப்புடன் இருக்க உதவுகிறது. உங்கள் தோல்விகளை நீங்கள் ஏற்கத் தொடங்கும் போது, நீங்கள் உங்களை மன்னிக்கவும் கற்றுக் கொள்கிறீர்கள். உங்க பிரச்சினைகளை தீர்க்க தீர்வுகளை தேட ஆரம்பிப்பார்கள். உங்க தோல்விகளை நீங்கள் ஏற்றுக் கொள்வது மீண்டும் அதை முயற்சி செய்ய ஊக்குவிக்கும்.

 

ஆரோக்கியமான உறவுகளை பராமரிக்க உதவி செய்யும்:

ஒரு நபருக்கு தங்கள் மேல் சுய அன்பு இல்லாத போது மற்றவர்களையும் அவர்கள் அவமதிக்க நேரிடும். இதனால் உறவில் சிக்கல்கள் ஏற்படும். உங்களை நீங்களே நேசிக்கும் போது மற்றவர்களுடன் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வீர்கள். எனவே மற்றவர்கள் உங்களை நேசிக்க வேண்டும் மதிக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் உங்களை நேசிக்கவும் மதிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.

 

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்:

நீங்கள் உங்களை நேசிக்கும் போது உங்களை கவனித்துக் கொள்ள ஆரம்பிப்பீர்கள். உங்க மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். இதனால் உங்க ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். ஆரோக்கியமான உணவுகளை எடுப்பது உங்களை அழகுபடுத்துவது, உங்க எடையை பராமரிப்பது, உடற்பயிற்சி செய்வது, முகத்தில் புன்னகை என்று உங்க அன்றாட வாழ்க்கையை மாற்றி அமைப்பீர்கள்.

 

நீங்கள் விரும்பும் ஒருவரை ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?…

நாம் நேசித்த ஒருவரையே திருமணம் செய்து கொள்ளும் போது வாழ்க்கை நன்றாக இருக்கும். ஏனெனில் உங்க இருவருக்கிடையேயான புரிதல், பொருத்தம், உணர்ச்சி பிணைப்புகள் என அனைத்தும் நன்றாக இருக்கும் என அறியுங்கள்.

நாம் விரும்பிய ஒருவரையே கைப் பிடிக்கும் போது நமக்கு எல்லா சந்தோஷமும் கிடைத்த மாதிரி இருக்கும் . காரணம் அவரைப் பற்றிய புரிதல் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அவர் மேல் உங்களுக்கு ஏற்கனவே அளவு கடந்த அன்பு இருப்பதால் உங்க வாழ்க்கை நன்றாகவே செல்லும். ஏனெனில் திருமண உறவு என்பது நெடுந்தூர பயணம். இதில் முன்பின் தெரியாத ஒருவரை தேர்ந்தெடுக்கும் போது உங்க வாழ்க்கையில் நீங்கள் எல்லாவற்றையும் புதியதாக அறிந்தாக வேண்டியிருக்கும்.

காதலும் திருமணமும்:

 

நீங்கள் காதலித்த நபரையே திருமணம் செய்யும் போது அவரின் குண நலன்கள், அவரின் பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றையும் நீங்கள் நன்கு அறிந்து இருப்பீர்கள். காதலித்த நபரையே நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் போது உங்க இருவருக்குமான புரிதல் நன்றாக இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில் இருந்து அவர்களுக்கான இடத்தை கொடுப்பது போன்ற விஷயங்களில் பிரச்சினை ஏற்படுவதில்லை.

 

எனவே காதலித்த நபரையே நீங்கள் திருமணம் செய்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த பரிச்சயமான நபரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களை நீங்கள் நன்கு அறிந்து இருப்பீர்கள்.

 

புரிதல் உணர்வு:

ஒரு அழகான திருமண பந்தத்தில் உங்களுக்கும் உங்க துணைக்கும் இடையே ஒரு புரிதல் உணர்வு இருக்க வேண்டும். இதுவே நீங்கள் நேசிக்கும் நபர் அவர் என்றால் கூடுதல் புரிதலை பெறுவீர்கள். ஒரு நபரை நீங்கள் முன்னதாகவே அறிந்திருக்கும் போது அவர் மேல் நம்பிக்கை தாமாகவே வந்து விடும். எனவே உங்க துணை மீது நம்பிக்கை ஏற்படுவது இயல்பாக இருக்கும்.

 

பொருத்தம்:

நீங்கள் காதலித்த நபரையே திருமணம் செய்யும் போது உங்களுக்கும் உங்க துணைக்கும் இடையே பொருத்தம் நன்றாக இருக்கும். இதுவே புதிய ஒரு நபராக இருந்தால் இந்த பொருந்தக்கூடிய தன்மை சற்று கடினமாக இருக்கும்.

 

உணர்ச்சி பிணைப்புகள்:

நீங்களும் உங்க துணையும் ஏற்கனவே காதலித்த நபராக இருந்தால் உணர்ச்சி பிணைப்பில் மூழ்கி இருப்பீர்கள். இந்த மாதிரி நம்பகமான உணர்ச்சி பிணைப்புகள் ஒரு வலுவான திருமணத்திற்கு அடிப்படையாக அமைகிறது.

 

​சண்டைகள் மற்றும் வாதங்கள்:

நீங்கள் காதலித்த நபரையே திருமணம் செய்து கொள்ளும் போது உங்களுக்கிடையே சண்டைகள் ஏற்பட்டால் கூட ஒருவருக்கொருவர் எப்படி அமைதிப்படுத்துவது என்பது உங்களுக்கு தெரியும். எனவே மனக்கசப்புகள் என்பது குறைவாக இருக்கும். நீங்கள் நேசிக்கும் ஒருவரின் குறைபாடுகளை ஏற்றுக் கொள்வது உங்களுக்கு பெரிதாக இருக்காது.

 

நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிந்து இருப்பதால் நிதி சிக்கல்களை எப்படி கையாள்வது என்பது உங்களுக்கு தெரியும். நிதி பிரச்சினைகளை எளிதாக கையாள்வீர்கள்.

 

அன்பு:

உறவில் அன்பு என்பது ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. ஒரு நபரை நீண்ட காலமாக நேசிக்கும் போது அவர்கள் மேல் உங்களுக்கு அளவு கடந்த அன்பு என்பது இருக்கும். எனவே நீங்கள் நேசித்த நபரையே திருமணம் செய்து கொள்ளும் போது உங்க திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையப் பெறுவீர்கள்.

தொடரும் …

Leave a Comment

Write and Earn with Pazhagalaam