Visitors have accessed this post 618 times.

வாயுத் தொல்லையும் உடனடி தீர்வும்

Visitors have accessed this post 618 times.

 

                          நமது அன்றாட வாழ்க்கையில் அதிகம் பாதிக்கும் பட்டியலில் வயிற்றுப் பிரச்சனையும் ஒன்று. வாய்வுத் தொல்லை பாடா படுத்துது கூறுவதை கேட்டு இருக்கிறோம். கேஸ்டிரிக் டிரபிள் என்ற வார்த்தையை படிக்காதவர்களும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

                        வாயுத் தொல்லைக்கு ஆங்கில வார்த்தையை தெரிந்து வைத்து இருப்பதோடு மட்டுமல்ல. அதற்கு தாங்களே சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். எப்படி காய்ச்சல் வந்தால் மாத்திரை, மருந்துக் கடைகளில் வாங்குவது போல, தலைவலி, வயிற்று வலி போன்றவற்றக்கும் வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.இஞ்சி மரப்பா, வெள்ளை பூண்டு, ஓமம், டைஜின், ஜெலுசில், ஆண்டாசிட் என்று தங்களுக்கு தெரிந்த மருந்துகளை சாப்பிடுகிறார்கள்.

                      பசிக்குறைவு, புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், அடிக்கடி வாய்வு வெளியேறுதல், வயிற்று உப்புசம் வயிற்று இரைச்சல், குமட்டல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய உணவுப் பாதை பிரச்சனையை அலோபதி மருத்துவம் வாயுத் தொல்லை என்கிறது. மனித உடற்கூறு அமைப்பின்படி சுவாசப்பை, உணவுப் பாதை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே வாயு இருக்க முடியும்.நம்மில் பலரும் எண்ணிக் கொண்டு இருப்பதைப்போல் தலை முதல் பாதம் வரை வாயு சுற்றிக் கொண்டு இருப்பதில்லை.அப்படி சுற்றினால் அது உயிருக்கே ஆபத்தாக அமையும்.

                     நாம் மூக்கு வழியாக சுவாசிக்கும் காற்று, தொண்டை மற்றும் சுவாசக் குழாய் வழியாக சுவாசப் பைக்கு செல்லுகிறது. இது ஒரு தனிவழி. இதற்கும் உணவுப் பாதைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. பொதுவாக நாம் ஒவ்வொருவரும் உணவை உண்ணும்போது சிறிதளவு காற்றையும் வயிற்றுக்குள் விழுங்கி விடுகிறோம். அதிலும் குறிப்பாக அவசரமாக உண்ணும்போது, பேசிக் கொண்டே உண்ணும் போது, காபி, தேனீர் மற்றும் காற்று அடைத்த மென்பானங்களை குடிக்கும் போதும், மது குடிக்கும் போதும், சூயிங்கம் மெல்லும் போதும், புகைப்பிடிக்கும் போதும், வெற்றிலை, புகையிலை மற்றும் பான் மசாலா போடும் போதும், அடிக்கடி தண்ணீர் குடிக்கும் போதும், நம்மை அறியாமலேயே இவற்றுடன் காற்றையும் விழுங்கிவிடுகிறோம்.

 

                  வாயுத்தொல்லையின் போது காற்று 80 சதவீதம் இரைப்பையில் இருந்து ஏப்பமாக வெளியேறி விடும் மீதி 20 சதவீதம் குடலுக்குள் சென்று ஆசனைவாய் வழியாக வெளியேறுகிறது. இந்த காற்று விழுங்கல் சாதாரணமாக இருந்தால் தொல்லை எதுவும் தருவதில்லை. அளவுக்கு மீறினால் வாய்வுப் பிரச்னையாக உருவாகும்.

                  குடலில் வாயு உருவாக இன்னொரு காரணமும் உள்ளது. அதாவது குடலில் உணவு செரிமானம் ஆகும் போது, அங்கு இயல்பாகவே இருக்கும். தோழமை பாக்டீரியாக்கள் பல வேதி மாற்றங்களை நிகழ்த்துகின்றன. அப்போது, ஹைட்ரஜன், மீத்தேன், கரியமில வாயு போன்ற வாயுக்கள் ஆசனவாய் வழியாக சத்தத்துடன் வெளியேறும். இந்த வாயுவில் துர்நாற்றம் இருப்பதில்லை. அதற்கு மாறாக குடலில் சில நொதிகள் குறையும்போது புரத உணவு சரியாக செரிமானம் ஆகாது. சில சமயங்களில் அந்த பாக்டீரியாக்களின் ஆதிக்கம் குடலில் அதிகரித்து விடும். இந்த இரு நிலைமைகளால் அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு, மெர்காப்டேன் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகும். இவை ஆசனவாய் வழியாக வெளியேறும்போதுதான் தூர்நாற்றம் வீசும்.

 

              வாயுத் தொல்லை வராமல் இருக்க என்ன செய்யலாம்? பார்ப்போம்!

 

*உணவை அவசர அவசரமாக சாப்பிடாதீர்கள்.

 

* சரியான உணவை சரியான நேரத்தில் நிதானமாக மென்று சாப்பிடுங்கள், வாயுப் பிரச்சனை பாதி சரியாகிவிடும்.

 

* வாயுத்தொல்லை இருப்பவர்கள். ஒரே வேளையில் வயிறு நிறைய சாப்பிடுவதை விட சிறு இடைவேளை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது.

 

* உணவு சாப்பிட்டதும் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

 

* பேசிக் கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ, உணவு சாப்பிடாதீர்கள், இரவு உணவை உறங்கச் செல்லுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு முடித்துவிடுங்கள்.

 

*காற்றடைந்த புட்டி பானங்களை உறிஞ்சு குழல் (ஸ்டிரா), மூலம் உறிஞ்சிக் குடிப்பதை தவிருங்கள்.

 

* தினமும் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். அல்லது நடைப்பயிற்சி செய்யுங்கள். வாயுத்தொல்லை குறையும்.தூர்நாற்றத்துடன் வாயு வெளியேறினால் பால், முட்டை, இறைச்சி போன்ற புரத உணவுகளை தவிர்த்து விடுங்கள், மலச்சிக்கல் இல்லாது பார்த்துக் கொள்ளுங்கள். வாயு உள்ளவர்கள் வறுத்த, பொறித்த உணவுகளை தவிருங்கள்.

  •  

Leave a Comment

Write and Earn with Pazhagalaam