Visitors have accessed this post 377 times.

ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்

Visitors have accessed this post 377 times.

அது ஒரு மிகப் பெரிய மடாலயம். ஒரு காலத்தில் அங்கு பேச்சுரிமை தடை செய்யப்பட்டிருந்தது. தடை என்றால் உங்க வீட்டுத் தடை எங்க வீட்டுத் தடை அல்ல… மாபெரும் தடை.

யாரும் பேசக் கூடாது. பேசவே கூடாது. ஒரே ஒரு விதிலக்கு… பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புத்த பிட்சுகள் மட்டும் பேசலாம்… அதுவும் இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டும்!

அந்த புத்தமடத்தில் தலைமைப் பிஷு இருந்தார். அவரது சீடர் ஒருவர் அந்த மடத்தில் 10 ஆண்டுகளை ஒரு வார்த்தைகூடப் பேசாமல் கழித்தார். பின்னர்  தலைமைப் பிஷுவிடம் வந்தார்.

‘சொல்லு… நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன?’

‘படுக்கை… கடினம்’

‘ஓ… அப்படியா…’ என்று பதிலளித்தார் தலைமை குரு.

பத்தாண்டுகள் கழித்து, அந்த பிஷு திரும்பி தலைமை குருவிடம் வந்தார்.

‘ஓ அதற்குள் பத்தாண்டுகள் போய்விட்டதா…’ – கேட்டார் தலைமை குரு.

‘சரி… இந்த முறை நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன?’

‘சாப்பாடு… நாத்தம்..’

‘ஓ… அப்படியா’ என்று கேட்டுக் கொண்டார் தலைமை குரு.

மேலும் பத்தாண்டுகள் கழிந்தன. பிஷு வந்தார்.

தலைமை பிஷூ, “ம்.. பத்துவருடங்கள் ஓடிவிட்டன… இப்போது நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன?’ என்றார்.

‘நான்… போகிறேன்’

‘நல்லது…’ என்றார் குரு.

பின்னர், ‘கண்ணா… இது நான் எதிர்ப்பார்த்த ஒண்ணுதான்…’, என்ற தலைமை குரு, ‘இந்த முப்பது வருடங்களும் நீ ஒன்றை மட்டும்தான் சொல்லிக் கொண்டிருந்தாய்… அது புகார்.. கிளம்பு!’ என்றார்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam