Visitors have accessed this post 632 times.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
வரலாறு
தமிழ் பிராமி எழுத்து, தென் இந்தியாவின் சாதவாகன பேரரசின் அரசர் ‘வசிட்டி புத்திர சாதகர்ணி’ – இன், இருமொழி நாணயத்தின் (160 AD) பின்புறத்தில் உள்ளது. முன் புறத்தில் அரசனின் முக உருவும், பிராகிருத மொழி பிராமி எழுத்திலும் உள்ளது.தமிழ், இந்தியா உட்பட இலங்கை, சிங்கப்பூரில் பேசப்படும் மொழிகளில் ஒன்று. மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ஆம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துகளில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 (ஒரு லட்சம்) கல்வெட்டுகளில் தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000 (அறுபதாயிரம்)- இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி.மு. 4-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி.மு. 400-ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-இல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் கி.மு. 600-ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன.பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.மு 200 முதல் கி.பி 200 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.