Visitors have accessed this post 857 times.

ஆன்மீக ஞானம்

Visitors have accessed this post 857 times.

                                                                           ஆன்மீக ஞானம்

சஷ்டி விரதம் இருப்பது எப்படி ?…

இந்த சஷ்டி விரதம் ஏன் இருக்க வேண்டும் ,எதனால் இருக்க வேண்டும் ,இதனால் என்ன பலன்கள் எப்படி இருக்க வேண்டும் .அழகான ஒரு பழமொழி சொல்லப்பட்டு இருக்கிறது .சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் குழந்தை வரும் ( அகப்பை என்றால் கருப்பை என்று பொருள் ) முருகப்பெருமானை வழிபடக்கூடிய ஒரு உன்னதமான திருநாள் இந்த கந்தசஷ்டி திருநாள் .

பொதுவாக குழந்தை இல்லாதவர்கள் சஷ்டி நாளில் ( மாதம் ஒரு நாள் ) வருகின்ற நாளில் விரதம் இருந்து வழிபடலாம் இதை மஹாசஸ்டி என்றும் சொல்லலாம் .அதாவது தீபாவளியை தொடர்ந்து வரும் சஷ்டியை ,கந்தசஷ்டி மஹாசஸ்டி என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய சஷ்டியை அனுஷ்டிக்க கூடிய திருநாள் .குழந்தை இல்லாதவர்கள் முதலில் இருக்க வேண்டிய விரதமே சஷ்டி விரதம் தான் . இந்த சஷ்டி விரதம் இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக குழந்தை பேரு வாய்க்கும் .

இந்த விரதத்தை கணவன் மணைவி இருவரும் சேர்ந்து இருக்க வேண்டும் .சில வீடுகளில் கணவர் இருப்பார் மனைவியால் இருக்க முடியாது ,சில வீடுகளில் மணைவி இருப்பார் கணவரால் இருக்க முடியாது .அதாவது சர்க்கரை வியாதி இருக்கு ,ரத்த அழுத்தம் இருக்கின்றது என்பவர்கள் பட்டினி இருக்க வேண்டாம் .திடகாத்திரமான உடல் இருப்பவர்கள் மட்டும் இதை விரதமாக இருந்து அனுஷ்டிக்கலாம் .

கணவன் ,மனைவி இருவரும் சேர்ந்து இருப்பது 100 / 100 சதவீதம் உடனடியாக நல்ல பலனை தரும் .இந்த விரதத்தை எப்படி மேற்கொள்ளவது .காலையில் இருந்து சாப்பிடாமல் இருக்கலாம் ,6 நாள் விரதம் இருக்கின்ற போது 6 நாளும் உணவு அருந்தாத முறை என்று உள்ளது . 6 நாள் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் ( எந்த விரதமாக இருந்தாலும் ) நிறைய குடிக்க வேண்டும் .தண்ணீர் குடித்தால் தான் இந்த உடல் அற்புதமான இயக்கத்தை நமக்கு கொடுக்கும் .தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலின் இயக்கங்கள் மாறுபடும் .

அதனால் தண்ணீர் குடிக்க வேண்டும் .பால் விரதம் என்று உள்ளது காலையில்  முருகனுக்கு அபிஷேகம் செய்த பால் (அ ) மாலையில் முருகனுக்கு அபிஷேகம் செய்த பால் மட்டும் குடித்து விட்டு விரதம் இருக்கலாம் .பால் பழம் விரதம் இருக்கலாம் .காலை ,மாலை இரண்டு வேலையும் ஒரு டம்ளர் பால் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு விரதம் இருக்கலாம் .

இன்னும் சிலர் மிகவும் கடுமையான விரதம் இருப்பார்கள் .அது மிளகு விரதம் ,முதல் நாள் சஷ்டி ஆரம்பிக்கும் போது 1மிளகு ,2-வது நாள் 2மிளகு ,3-வது நாள் 3மிளகு ,6-வது  நாள் 6மிளகு  சாப்பிட்டு விட்டு தண்ணீர் மட்டும் குடித்து விட்டு விரதம் இருப்பார்கள் .இளநீர் விரதம் ,துளசி தண்ணீர் விரதம் என்று  இருப்பார்கள் .ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டும் சாப்பிட்டு விட்டு விரதம் இருப்பார்கள் .இப்படி பல்வேறு விதமான விரதம் சஷ்டியில் உண்டு .உங்களால் என்ன விரதம் இருக்க முடியுமோ அதை இருங்கள் .

இப்படி 5 நாள் விரதம் இருந்து விட்டு 6-வது நாள் ஒரே ஒரு நாளாவது கண்டிப்பான முறையில் உணவை தவிர்த்து  சூரசம்ஹாரம் அன்று விரதத்தை நிறைவு செய்யலாம் .சுரசம்ஹாரம் முடிந்த பிறகு குளித்து விட்டு விரதத்தை நிறைவு செய்து விட்டு நாம் நம்முடைய உணவை எடுத்துக்கொள்ளலாம் .இந்த விரதத்தை எங்கே இருப்பது ,முருகனின் அறுபடை வீடுகளில் (அ ) பிரபலமான முருகன் கோவில்களில் இருக்கலாம் .குறிப்பாக திருச்செந்தூர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கேயே தங்கி விரதம் இருப்பார்கள்.

ல்லை என்றால்  வீ ட்டிலேயே அந்த விரதத்தை கடைபிடித்து நிறைவு நாள் அன்று பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலில் சென்று வழிபடலாம் .குழந்தை இல்லாதவர்கள் இந்த விரதம் இருக்கின்ற போது அருணகிரிநாதர் அருளிச் செய்த சுவாமிமலை திருப்புகழ் ஓன்று இருக்கிறது .ஜகமாயை ஒற்று கண வாழ்வில் வைத்த திருமாது கர்பம் உடலேறி என்று வரும் திருப்புகழை பாராயணம் செய்யலாம் .குறிப்பாக கந்தசஷ்டி கவசம் ( 6படை வீட்டுக்கும் தனித் தனி சஷ்டி கவசம் இருக்கிறது ), ஆனால் நமக்கு தெரிந்தது திருச்செந்தூர் கவசம் காலையிலும் மாலையிலும் பயபக்தியோடு படிக்க வேண்டும் அப்படி செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும் .

 

திருமண தடைநீக்கும் திருச்சிற்றம்பலம் …

சிவபெருமானை அதிகமாக நேசிக்கும் அடியவர்களும் ,அவரின் பக்தர்களும் தவறாமல் உச்சரிக்கும் ஒரு சொல் “திருச்சிற்றம்பலம் “ மாணிக்க வாசகர் சொல்லச் சொல்ல சிவபெருமானே எழுதியதாகவும் , அதன் முடிவில் தன்னுடைய பெயரை திருச்சிற்றம்பலம் என்று எழுதியதாகவும் வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன அத்தனை சிறப்பு வாய்ந்த இந்த நாமத்தை உச்சரித்து பலன் பெற்றவர்கள் ஏராளம் தஞ்சவூர் மாவட்டம்  பட்டுக்கோட்டை அருகே  திருச்சிற்றம்பலம் என்ற பெயரிலேயே ஒரு திருத்தலம் இருப்பதும் ,அங்கு சிவாலயம் ஓன்று இருப்பதும் எவ்வளவு பெரிய சிறப்பாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் .

அந்த ஊரில் வசிக்கும் மக்கள்தான் என்ன தவம் செய்தவர்களாக இருக்க வேண்டும் .திருவாரூரில் பிறந்தால் முக்தி காசியில் இறந்தால் முக்தி ,திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி ,அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலத்து மண்ணை உடலில் பூசிக்கொண்டால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள் .அப்படிப்பட்ட திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது .

இந்த ஆலயத்தில் லிங்க திருமேனியாக காட்சி தரும் சிவபெருமான் ,பெரிய நாயகி உடனாய புராதனவனேஸ்வரராக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் ,இங்கு கொடிமரம் இல்லை .ஆலயத்தின் வெளியே நந்திகேஸ்வரர் அவருக்கு  எதிர் புறம் வடக்கு பகுதியில் இரட்டைவிநாயகர் சன்னதி உள்ளது .லிங்கத் திருமேனியில் சிவபெருமான்  கிழக்கு நோக்கியும் ,அம்பாள் தெற்கு பார்த்தும் வீற்றிருக்கிறார்கள் .

உள்ப்ரகாரத்தின் வடக்கில் மஹாகணபதி தன தும்பிக்கை முகத்தை வடக்கு புறமாக தலைசாய்த்து வித்தியாசமான முறையில் காணப்படுகிறார் .இது ஒரு அபூர்வமான அமைப்பாகும் .மேலும் மஹாலக்ஷ்மி ,வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான் ,தட்சணாமூர்த்தி ,சப்த கன்னியர்கள் சண்டிகேஸ்வரர் ,லிங்கோத்பவர் ,பிரம்மன் ,துர்கை மற்றும் பைரவர் ,சூரியன் ,சந்திரன் நவக்கோள்களுடன் கூடிய லிங்கத் திருமேனி என பல்வேறு கடவுள் சிலைகளை ஆலயம் முழுவதும் நாம் காண முடியும் .இந்த ஆலயத்தின் தலவிருட்சம் வில்வ மரம் ஆகும் .

ஆடி ,மார்கழி மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் இந்த ஆலயத்தில் திருமணம் ,காதுகுத்து ,நிச்சயதார்த்தம் என பல சுப நிகழ்ச்சிகள் நடந்தபடியே இருக்கும் .இத்தல இறைவனின் பெயரை போலவே இந்த கோவிலின் அமைப்பும் உருவ சிலைகளும் புராதன காலத்தை சேர்ந்தவை போல் காட்சி தருகின்றன .இந்த ஆலயமானது திருமணத் தடையை நீக்கும்  பரிகாரத்தலமாக திகழ்கிறது .பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் , கீரமங்கலம் வழித்தடத்தில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் திருச்சிற்றம்பலம் திருத்தலம் அமைந்துள்ளது .

 

எமன் சன்னதி …

சிவாலய தரிசனத்தை முடித்து வெளியே வந்தால் கிழக்கு நோக்கி 15 நிமிட நடைப்பயணத்தில் எமதர்மன் சன்னதி இருக்கிறது .கையில் சூலாயுதம், பாசக்கயிறு மந்திரக்கோல் தாங்கி ,வலது காலை மடக்கி இடது காலை தொங்க விட்ட நிலையில் எமதர்மன் காட்சி தருகிறார் .இந்த எமதர்மனை தரிசித்தாலே பாவங்கள்  விலகிவிடுவதாக நம்பிக்கை .

சனிக்கிழமை தோறும் பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை எமகண்ட நேரத்தில் ஆயுள் விருத்திக்கான பூஜைகள் இங்கு செய்யப்படுகின்றன பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர ,மரண கண்டம் ,விபத்துக்கள் நீங்க ,பகை விலகவும் இந்த சன்னதியில் பூஜைகள் நடத்தப்படுகிறது .சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கீற்று கொட்டகையில் சுதை சிற்பமாக இருந்த எமதர்மனுக்கு தற்போது கற்சிலை வடித்து வைக்கப்பட்டுள்ளது .அவரை சுற்றி பரிவார தெய்வங்கள் உள்ளனர் .எமன் சன்னதிக்கு தெற்கு பகுதியில் ஆண்கள்  மட்டும் நீராடும் “எமதீர்த்த குளம் “உள்ளது .

 

சதாசிவ லிங்கமும் ,ஸ்படிக லிங்கமும் …

சிவபெருமானின் 64 வடிவங்களில் “ சதாசிவம் “என்ற வடிவமும் ஒன்று .5 முகங்களுடன் காட்சியளிக்கும் இவரை 5 தொழில்களை நிகழ்த்துபவராக புராணங்கள் சித்தரிக்கின்றன .படைத்தல் ,காத்தல் ,அழித்தல் ,மறைத்தல் ,அருளல் ஆகிய 5 தொழில்களையும் அவர் செய்வதாக சொல்லப்படுகிறது . சதாசிவனின் மனைவியாக இருப்பவளின் பெயர் மனோன்மணி .இந்த சதாசிவமானவர் 5 முகங்களையும் ,10திருக்கரங்களையும் ,15 கண்களையும் கொண்டவர் .இவர் தனது வலது பக்க கரங்களில் சூலம் ,மாழு ,கட்வாங்கம் ,வஜ்ரம் மற்றும் அபயஹஸ்த முத்திரை யோடும் ,இடது பக்க கரங்களில் நாகம் ,மதுலிங்கப்பலம் ,நிலோற்பலம் ,உடுக்கை மணி  மாலை ஆகியவற்றை வைத்தும் காட்சி தருகிறார் .

இந்த வகையான சதாசிவ சிலை,அலகாபாத்அருகில்உள்ளபிடா என்ற இடத்தில் கிடைத்துள்ளது.இந்த விக்கரகமானது 2-ம் நூற்றாண்டை சேர்ந்தது என கண்டுபிடித்துள்ளனர்.

13-ம்  நூற்றாண்டைசேர்ந்த பஞ்சமுக சதாசிவத்தை ஆந்திரமாநிலம்காளகஸ்தியில் தரிசிக்கலாம்.

நேபாளத்திலும் ஏராளமான சதாசிவ விக்ரகங்களை  நாம் பார்க்க முடியும் .

மத்திய பிரதேசம் நதிசிவானா கரையில் உள்ள  மன்டாகாவூர் என்ற இடத்திற்கு சென்றால் ,அஷ்டமுக பசுபதி நாதரை தரிசனம் செய்யலாம் .இங்கே கீழே நான்கு அதற்கு மேலே நான்கு என்ற ரீதியில் லிங்கத்தின் மீது சிவனின் முகங்கள் அமைந்திருக்கும் .

வியட்நாம் ,கம்போடியா ,போர்னியா  மற்றும் ஆப்கனிஸ்தானிலும் ,சதாசிவ மூர்த்தியை தரிசனம் செய்யலாம் .

சதாசிவ லிங்கம் போன்றே ஸ்படிக லிங்கமும் அபூர்வமான ஓன்று ,ஜம்முவில் உள்ள ரன்பிரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்படிக லிங்கம் மிகப்பெரியதாகும் .

உத்தரகாண்ட் மாநிலம் டெக்ராடூன்  மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பார்கேஸ்வரர் கோவிலில் ,இரண்டு ஸ்படிக லிங்கங்கள் அருகருகே  வைக்கப்பட்டுள்ளன .

தமிழ்நாட்டில் முக்கிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது .இதற்கு அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை சிறப்பு தரிசனம் உண்டு .

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஸ்படிக லிங்கம் இருக்கிறது .இதனை “உடையவர் “ என்று அழைப்பார்கள் .

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள பொற்சபையிலும் ஸ்படிக லிங்கம் இருக்கிறது இந்த லிங்கத்தையே நடராஜராக பாவித்து அபிஷேகம் செய்வார்கள் .

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் ,திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் ,சங்கரன்கோவில் ,சங்கரநாராயணர் கோவில் ஆகிய தலங்களிலும் ஸ்படிக லிங்கங்கள் இருக்கின்றன .

 

மங்கல வாழ்வு அருளும் மாரியம்மன் …

அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள கோடந்தூர் கிராமம் ,இங்குள்ள நாய்க்கன்வலசு என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது .300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் அருளும் மாரியம்மன் சுயம்புவாக தோன்றியவர் .தன்னை தேடி வந்து வேண்டிக்கொள்பவர்களுக்கு வேண்டிய வரத்தை அருளும் ஒப்பற்ற தேவியாக இந்த அன்னை இருக்கிறாள் .இந்த மாரியம்மன் விருப்பங்களை நிறைவேற்றும்  இச்சா சக்தியாக அவதரித்த தலம் இதுவாகும் .இந்த அன்னையை தரிசித்தால் பக்தர்கள் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகும் என்பது நம்பிக்கை .

இது ஒன்றும் பெரிய கோவில் இல்லை .ஒரு ஊஞ்ச மரத்தின் அடியில் அமர்ந்து மகா சக்தியாக அருள்பாலித்து கொண்டிருக்கிறார் .இங்கு ஊஞ்ச மரத்தில் வில்வ மரமும் இணைந்து இருப்பது அதிசயமாகும் .இந்த ஆலயத்தில் இருக்கும் அமைதி நமக்கு மன  நிம்மதியை தரும் .அழகு கொஞ்ச அருள்பாலிக்கும் அம்மனை பார்த்தாலே மெய்சிலிர்க்கும் ,இந்த அம்மனை பௌர்ணமி தினத்தில் தரிசிப்பது மிகவும் சிறப்பானது .

பொருளாதாரம் உயரவும் ,கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சனை  தீரவும் ,சுகப்பிரசவம் நடைபெறவும் , குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறவும் ,நோய் -நொடி நீங்கவும் ,மன அமைதி கிடைக்கவும் ,மங்கள வாழ்வு தரும் அம்மனை பிரார்த்தனை செய்தால் அது விரைவிலேயே நடந்தேறுவதை பார்க்கலாம் .

 இந்த ஆலயம் திருமண தடை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது .இங்கு வரும் பக்தர்கள் தங்களுடைய மகன் அல்லது மகள் ஜாதகத்தை அம்மனின் திருவடியில் வைத்து வணங்கி வேண்டிசெல்கின்றனர் .அவர்களின் வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறுகிறது .இதையடுத்து அவர்கள் மணமக்களை அழைத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள் .

கோவில்  அமைந்துள்ள இடம் …

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளக்கோவிலில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது .கரூர் சாலையில் உள்ள குருக்கத்தியில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலும் ,வைரமடையில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த கோவிலை அடையலாம் .பேருந்து வசதிகள் கிடையாது .வாடகை வாகன வசதிகள் இருக்கின்றன .

 

பகைவர் பயம் நீக்கும் வீரபத்திரர் …

சிவபெருமானின் வீரதீர செயல்கள் வெளிப்பட்ட தலங்களாக “அட்டவீரட்டங்கள்” எனப்படும் 8 தலங்கள் உள்ளன .அவற்றில் 6 இடங்களில் சிவபெருமான் நேரடியாக தோன்றி எமன் ,அந்தகன் ,சலந்தரன் ,திரிபுராதிகள் ,கஜாசுரன் ,மன்மதன் ஆகியோரை அழித்தும் ,உயிர்ப்பித்தும் அருள்புரிந்தார் . மற்ற இரு இடங்களில் வீரபத்திரர் ,பைரவர் ஆகியோரை அனுப்பி முறையே தட்சன் ,பிரம்மன் ஆகியோரை தண்டித்ததாகவும் அந்த தலங்களின் புராணங்கள் சொல்கின்றன .

இந்த அட்டவீரட்ட  தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது தட்சனை வீரபத்திரர் வதம் செய்ததாக சொல்லப்படும் திருப்பறியலூர் திருத்தலம் .ஒரு சாபம் காரணமாக பூலோகத்தில் தட்சனின்  மகளாக பிறந்திருந்த பார்வதிதேவி ,தாட்சயினி என்ற பெயருடன் வளர்ந்து வந்தாள் .அவள் சிவபெருமானை நினைத்து தவம் செய்து அவரையே மணந்து கொண்டாள் .தன் மகள் தனக்கு தெரியாமல் திருமணம் செய்ததால் அவள் மீதும் ,ஈசனின் மீதும் தட்சன் கோபம் கொண்டான் .

ஒரு முறை அவன் நடத்திய யாகத்திற்கு மஹாவிஷ்னு, பிரம்மன் ,உள்ளிட்ட பிரதேவர்களையும் ,ரிஷிகளையும் ,முனிவர்களையும் அழைத்திருந்தான் .ஆனால் ஈசனை அழைக்கவில்லை ,அவருக்கு உரிய அவிர்பாகத்தையும் கொடுக்கவில்லை இதை தட்டி கேட்க சென்ற  தாட்சரயிணியையும்  அவமதித்து அனுப்பினான் .இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தன்னுடைய அம்சமாக வீரபத்திரரை தோற்றுவித்து தட்சனை அழிக்க அனுப்பினார் .வீரபத்திரர் தட்சனையும் அவனது யாகத்தையும் அழித்ததாக புராணங்கள் சொல்கின்றன .

வீரபத்திரர் பலருக்கும் குலதெய்வமாக இருக்கிறார் .பராசக்தியால் தோற்றுவிக்கப்பட்ட பத்ரகாளி அம்மன் வீரபத்திரருக்கு தேவியாக இருந்து அருள்கிறாள் .வீரபத்திரருக்கு விரதங்களும் கடைபிடிக்கபடுகின்றன .செவ்வாய் கிழமைகளில் இந்த வீரபத்திரர் விரதத்தை மேற்கொள்ளலாம் .அப்போது சந்தனத்தில் அபிஷேகம் செய்து சிவப்பு வண்ண மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும் என்கிறார்கள் .

ஐப்பசி மாதம் வரும் வளர்பிறை அஷ்டமியிலும் வீரபத்திரர் விரதத்தை கடைபிடிக்கலாம் .இந்த விரதத்தை வீரபத்திர “வீரபத்திர விரதம்” என்றும் “மகா அஷ்டமி விரதம் “ என்றும் சொல்வார்கள் .இந்த விரத நாளில் தும்பை ,நந்தியாவர்தம் போன்ற வெண்மை  நிற மலர்களை கொண்டு வீரபத்திரரை அர்ச்சித்து ,வெண் பட்டு துணியால் அலங்கரித்து ,மகா நிவேதனம் செய்து வழிபட்டால் குடும்ப சந்ததிகள் தழைத்தோங்கும் என்பது நம்பிக்கை .

சிவபெருமானின் அட்டவீரட்ட தலங்களில் முக்கியமானது திருப்பறியலூர் .இது தற்போது பரசலூர் என்று அழைக்கப்படுகிறது .மயிலாடுதுறையில் இருந்து திருக்கடவூர் செல்லும் சாலையில் இந்த திருத்தலம் இருக்கிறது .இந்த ஆலயத்தின்  மகா மண்டபத்திற்கு வடக்கில் வீரபத்திரர் சன்னதி உள்ளது .மழு ,சூலம் ,கதை ,கத்தி கேடயம், கபாலம் ,மணிமாலை ஏந்தியபடி  வீரபத்திரர் காட்சி தருகிறார் .இவரை வணங்கினால் சகல பயமும் நீங்கி இன்பமான வாழ்வை பெறலாம் .

 

தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் …

மனிதன் வாழ்வில் பல சோதனைகள் ,வேதனைகள் இருக்கத்தான் செய்யும் .அது அவரவர் செய்த கர்ம வினைகளின் பலன் ஆகும் .தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும் ? ஆனால் அப்படிப்பட்ட தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த ஆலயங்களும் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன .அதில் ஒன்று தான் திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில் .இந்த ஆலயத்தை பற்றியும் ,அங்கு இருக்கும் இறைவனை பற்றியும் நாம் தெரிந்து கொள்வோம் .

நம்மை படைத்த பிரம்மனுக்கு தனி சன்னதிகளோ ,ஆலயங்களோ அதிகம் கிடையாது காரணம் பிரம்மனின் அகந்தை .சிவனுக்கு நிகராக 5 தலைகளை பெற்ற கர்வத்தில் ஆணவமாக பேசிய பிரம்மனின் ஒரு தலையை கொய்தார் சிவபெருமான் .அதோடு அவரது படைப்பு தொழிலுக்கு தடை விதித்தார் .தன்  தவறை உணர்ந்த பிரம்மன் சிவனை பணிந்து அனுதினமும் பல தலங்களில் சிவலிங்கங்கள் உருவாக்கி பூஜைகள் செய்ததன் பலனாக இழந்த தலையை மீண்டும் பெற்றார் ,பிரம்மனின் சாபத்தை சிவபெருமான் போக்கி அருளிய இடமே திருப்பட்டூர் ,இங்கு பிரம்மனுக்கு தனி சன்னதி இருக்கிறது .

இந்த தலத்தில் சிவனை அபிஷேகம் செய்வதற்காக பிரம்மன் உருவாக்கிய தீர்த்தக்கிணறு “பிரம்ம தீர்த்தம் “என்று அழைக்கப்படுகிறது .வழிபாட்டுக்காக  பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 லிங்கங்கள் ,12 சிறிய சன்னதிகளில் பக்தர்களால் வணங்கப்படுகிறது .பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 லிங்கங்களுடன் ,இங்குள்ள பிரம்மபுரீஸ்வரரையும்  வணங்கும் போது சிவபெருமானின் 13 திருத்தலங்களுக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் .

பாதாள ஈஸ்வரர் ,சுத்த ரத்திணேஸ்வரர் ,தாயுமானவர் ,கயிலாசநாதர் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ,லால்குடி சப்தரிஷிஸ்வரர் ,திரு அண்ணாமலையார் பழமலைநாதர் ,பிரம்ம புரிஸ்வரர் , காளத்திநாதர் ,ஏகாம்பரேஸ்வரர் ,மண்டூகநாதர் ஆகிய சிறப்பான சிவத்தலங்களின் லிங்கங்களே பிரம்மாவால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன .இவற்றில் ஆதிகோவிலாக அறியப்படும் கயிலாசநாதர் சன்னதியில் நம்பிக்கையான வழிபாடுகள் அதற்குரிய பலனை தரும் .

இங்கு அருள்பாலிக்கும் பிரம்மதேவனே ,குருபாகவனாக வணங்கப்படுகிறார் .எனவே அவருக்கு மஞ்சள் காப்பு செய்து ஆராதணை நடைபெறுகிறது .குருவுக்கு உகந்த வியாழக்கிழமைகளிலும் ,சிவனாருக்கு உகந்த திங்கள் கிழமைகளிலும் ,ராஜகிரகமான சூரியனின் ஆதிக்கம் உள்ள  ஞாயிற்றுக்கிழமைகளிலும் இங்கு வந்து வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது .

வருடம் தோறும் பங்குனி 15 ,16 ,17 ,ஆகிய தேதிகளில் சூரியன் தன் கதிர்களால் சிபெருமானை வழிபடும் காட்சி அற்புதமானது .அந்த நாட்களில் காலை 6 மணிக்கு சென்றால் இந்த அற்புத காட்சியை கண்டு ரசிக்கலாம் .சூரியன் ஈசனை வழிபடும் தினத்தில் இங்கு வந்து பிரம்மபுரீஸ்வரரையும் ,பிரம்மனையும் வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை .

இங்குள்ள கயிலாசநாதர் கோவில் புகழ் பெற்ற பல்லவர் கால கட்டுமான சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது .7 அல்லது 8-ம் நூற்றாண்டை சேர்ந்த இதன் தேர் வடிவிலான கோவில் அமைப்பும் ,எந்நேரமும் மேலிருந்து விழும் அபிஷேகத்தில் குளிர்ந்தவராக அருளும் பதினாறு ( 16 ) பட்டைகள் கொண்ட தாராலிங்கமாக இங்கு ஈசன் அருள்பாலிக்கிறார் .இந்த லிங்கத்தை சந்திரகலா லிங்கம் என்கிறார்கள் .இந்த சன்னதிக்கு எதிரில் உள்ள நந்தி நிஜ உருவத்தை போன்று அமைந்து வியக்க வைக்கிறது .

ஈஸ்வரருக்கு 64 மூர்த்தங்கள் உண்டு ,அதில் தத்புருஷ மூர்த்தங்கள் 25 வகை என்கின்றன சைவ நூல்கள் .அவற்றுள் காலபைரவருக்கு ஒருவர் .நம் பாவபுண்ணிய கணக்குகளை கணித்து நமக்கு நன்மைகளை வழங்குவதில் காலபைரவர் நிகரற்றவர் பொதுவாக வடகிழக்கு மூலையில் தெற்கு திசையை நோக்கியபடி உள்ள காலபைரவரை தரிசித்து இருப்போம் ,ஆனால் திருப்பட்டூர் தலத்தில் மேற்கு நோக்கியபடி இருக்கிறார் காலபைரவர் .இவரின் வலது செவியும் அதில் இருக்கும் தாடங்கமும் மற்ற தலங்களில் உள்ளதுபோல் இல்லாமல் வித்தியாசமாக இருப்பதும் கூடுதல் சிறப்பு .

இந்த  ஆலயத்தில் 36 தீபங்களை ஏற்றி வழிபடுவது நல்ல பலன்களை தரும் என்பது நம்பிக்கை .நம்மை ஆட்சி செய்யும் 27 நட்சத்திரங்கள் ,மற்றும் 9 கிரகங்களை குறிக்கும் வகையில் 36 தீபங்கள் ஏற்றி ,9 முறை பிரகாரத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்யும் போது  நமது துன்பங்கள் அனைத்தும் விலகும் ,கிரக தோஷங்கள்  நீங்கும் .ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திர நாளிலும் இங்கு வந்து இந்த பிரார்த்தனை செய்வது நல்ல மாற்றத்தை கொடுக்கும் .

பிரம்மாவின் தலையை கொய்ததால் சிவனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் உண்டானது அதில் இருந்து விடுபடுவதற்காக மஹாவிஷ்னுவை சிவபெருமான் வழிபட்டார் இதனால் மகிழ்ச்சி அடைந்த  விஸ்ணு ,ஈசனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கினார் என்பது புறநா வரலாறு .அதன்படி மஹாவிஷ்னுவுக்கும்  இங்கு தனி கோவில் உள்ளது பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் மேற்கு பகுதியில் அது அமைந்துள்ளது .இந்த வரதராஜப் பெருமாள் திருக்கோவில் .8-ம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்டது இந்த கோவில் .

இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று பிரதோஷ வேளை ,இந்த தலத்தில் பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும்போது அங்கு இருந்தபடி ஒரு தூணில் இருக்கும் நரசிம்மரையும் தரிசிக்க முடியும் .ஒரு பிரதோஷ நாளில்தான் மஹாவிஷ்னு நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்தார் .ஆகவே பிரதோஷ நேரத்தில் நந்தியோடு ,நரசிம்மரையும் வழிபட்டால் நம்முடைய இன்னல்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை .

இந்த தலத்தில் உள்ள 5 நிலை ராஜகோபுரத்தில் நுழைந்து ஐந்தெழுத்து நாயகனான சிவனாரை தரிசித்தால் வாழ்வின் 5 நிலைகளிலும் நம்மை காத்து ரட்சிப்பார் இந்த இறைவன் .அதேபோல் கோபுர வாசலில் இருந்து ஏழு நிலைகளை கடந்துதான் இறைவனை தரிசிக்க முடியும் . சூரிய பகவானே தன்னுடைய ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் ,ஏழு நிலைகளை கடந்தே  சிவபெருமானை தரிசிக்கிறார் என்பது ஐதீகம். ஆகவே  இங்கு வந்து தரிசிப்பவர்களின்  ஏழேழு ஜென்ம பாவங்களும் தீரும் .

 

திருமண  வரம் தரும்  கேரளத்து திருமணஞ்சேரி …

திருமண தடைக்கான தோஷங்களை நீக்கி உடனடியாக திருமணம் நடைபெற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் சிறப்பு மிக்க கோவிலாக கேரளாவில் உள்ள கொல்லம் நகரில் அமைந்திருக்கும் உமா மகேசுவர சுவாமி ஆலயம் திகழ்கிறது .

கயிலாயத்தில் இருந்து சிவபெருமானும் பார்வதிதேவியும் தென்பகுதியில் இருக்கும் அகத்திய மலைக்கு  வான்வழியாக வந்து கொண்டிருந்தனர் .பூஉலகை ரசித்து கொண்டே வந்த இறைவி வழியில் ஓரிடத்தில் இருந்த இயற்கையின் அழகை கண்டு மனம் மயங்கினாள் .பார்வதி தேவிக்கு சிறிது நேரமாவது அங்கு தங்கி செல்ல வேண்டும் என்று தோன்றியது ,இறைவியின் விருப்பத்தை அறிந்த சிவபெருமான் அவளோடு வானில் இருந்து கீழே இறங்கினார் .இருவரும் அங்கு இருந்த ஆலமரம் ஒன்றின் கீழே தங்கினார் .

பிற்காலத்தில் அந்த இடத்தின் அருகே ஒரு சிற்பி குடியிருந்தார் .அவரின் கனவில் தோன்றிய இறைவன் ஆலமரத்தடியில்  நானும் இறைவியும் இருப்பதாக தெரிவித்து அங்கு இருவருக்கும் சிலை அமைத்து கோவில் கட்டி வழிபடும்படி கூறினார் .

மறுநாள் காலையில் அரண்மனைக்கு சென்ற சிற்பி ,தான் இரவில் கண்ட கனவை அரசனிடம் கூறினார் .கோவில் கட்டுவதற்கான மன்னனின் அனுமதியை பெற்று அந்த ஆலமரத்தின்  அடியில் ஒரு பீடம் அமைத்து அதன் மேல் களிமண்ணால் செய்யப்பட்ட சிவபெருமான்  மற்றும் பார்வதிதேவி சிலைகளை வைத்து வழிபட்டு வந்தார்கள் .

காலம் செல்லச் செல்ல கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது .கோவிலின் புதிய கட்டுமான பணிகள் தொடங்கின ,கருவறையில் இருந்த சிலைகளும் கருங்கல்லால் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கோவில்  வரலாறு சொல்கிறது .

கோவிலின் அமைப்பு …

கோவிலின் முன்பகுதி தமிழக கட்டுமான முறையிலும் ,கோவிலின் உள்பகுதி அனைத்தும் கேரளா கட்டுமான முறையிலும் கட்டப்பட்டு இருக்கிறது .கோவில் கருவறையில் ஒரே பீடத்தில் சிவபெருமானும் அவருக்கு இடது புறத்தில் இறைவி பார்வதிதேவியும் அமர்ந்த நிலையில் இருக்கின்றனர் .இங்கு இருக்கும் இறைவி “உமா” என்றும் இறைவன் “மகேசுவர சுவாமி” என்றும் அழைக்கப்படுகின்றனர் .

ஆலயத்தின் முகப்பு பகுதியில் கணபதி முருகன் மற்றும் நந்திகேசன் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன .கோவிலுக்குள் நாகர்களும் காவல் தெய்வமான மாடன் தம்புரானுக்கும் சன்னதிகள் உள்ளன .

இங்கு தினசரி வழிபாடாக கணபதி வேள்வி ,உமாமகேசுவர பூஜை ,ஐஸ்வர்ய பூஜை நடைபெறுகிறது .ஞாயிற்று கிழமை அன்று பாக்யசூக்திர  பூஜை ,திங்கள் கிழமை சுமங்கலி பூஜை ,சுயம்வர பூஜை மற்றும் மாங்கல்ய பூஜை, செவ்வாய் கிழமை முருகன் மற்றும் மாடன் தம்புரான் ஆகியோருக்கு சிறப்பு பூஜை ,புதன் கிழமை சரஸ்வதி பூஜை ,வியாழக்கிழமை மாங்கல்ய பூஜை ,சுயம்வர அர்ச்சனை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ராகு காலா பூஜை சனிக்கிழமை நீராஞ்சனம் என்று ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன .

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று திருவாதிரை திருவிழா ,மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி ,புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி ,சித்திரை மாதம் வரும் அட்சயதிருதியை போன்றவை சிறப்பாக கொண்டாடப்படும் .இங்கு ஐயப்பனுக்கு உரிய மண்டல பூஜை நாட்களிலும் ,மகரவிளக்கு நாளிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன .

இந்த கோவிலில் ஜாதக ரீதியாக சில தோஷங்களால் தடைப்பட்டிருக்கும் திருமண தடையை நீக்குவதற்காக சிறப்பு வழிபாடுகள் செய்பவர்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை .

கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் தம்பதியர்கள் சேர்வதற்காக “ சம்வத சூக்த மந்திர புஷ்பாஞ்சலி “ எனும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது .இந்த ஆலயம் தினமும்  காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும் ,மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும் .

இந்த கோவில் கேரளா மாநிலம் கொல்லம் நகரில் உள்ள உமாமகேசுவரம் சந்திப்பு என்று அழைக்கப்படுகிறது .இந்த கோவிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன . 

 

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா ?.. ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும் ?.. ருத்ராட்சத்தின் முகங்களும் அதன் பயன்களும் என்ன ?

ஒவ்வொரு மனிதனும் தன்னை இறைவனோடு இணைத்து கொள்வதற்கும் இறைவனின் கருணையை பெறுவதற்கும்  பல்வேறு வகையான வழிகளை தேடி அலைகிறான் .அந்த வகையில் பக்தி மார்க்கமாகவும் ,ஞான மார்க்கமாகவும் நம்மை நாம் அடையாள படுத்திக்கொள்ள பல்வேறு விஷயங்களில் ஒன்று ருத்ராட்சம் .இந்த ருத்ராட்சத்தை யார் எல்லாம் அணியலாம் ,இது எப்படி தோன்றியது ,ருத்ராட்சம் அணிந்தவர்கள் என்ன செய்ய வேண்டும் ,என்ன செய்ய கூடாது ,எத்தனை முகங்களுக்கு என்ன சிறப்பு இருக்கிறது .

 

ருத்ராட்சம் என்பது சைவத்தின் அடையாளமாக விளங்கக்கூடிய திருநீறு ருத்ராட்சம் .ருத்ரன் என்றால் சிவன் ,அக்ஸம் என்றால் கண்கள் .மீனாட்சி என்றால் மீனை போன்ற கண்களை உடையவள் காமாட்சி காமனை பழித்த கண்களை உடையவைள் ,ருத்ரம் என்பது சிவன் சிவபெருமானின் கண்ணீர் துளிகளில் இருந்து கிடைத்த ஒரு அபூர்வமான பொருள் இந்த ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணிந்து கொள்கிறார்களோ அவர்களை சிவபெருமான் தன கண்களை போல காப்பாற்றுவார் .

அதனால் இதற்கு ருத்ராட்சம் என்று பெயர் வந்தது .இந்த ருத்ராட்சம் எங்கிருந்து நமக்கு கிடைக்கிறது என்றால் ,இது ருத்ராட்ச மரத்தின் மூலமாக கிடைக்கும் காய் .கண்டிகை என்ற மறுபெயரும் உண்டு. இது எங்கிருந்து நமக்கு கிடைக்கிறது என்றால் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அதிகமாக கிடைக்கிறது .இங்கிருந்து தான் உலகம் முழுக்க அனுப்பப்படுகிறது .அது மட்டும் அல்லாமல் இமையமலையில் பல்வேறு பகுதிகளில் இந்த ருத்ராட்சம் கிடைக்கிறது .வேறுசில வெளிநாடுகளிலும் கிடைக்கிறது .

இந்த ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம் ,ஆண் பெண் என்று எல்லோரும் அணியலாம் ,இதற்கு வயது வரம்பு கிடையாது .ஆண்கள் சாதாரணமாக அணிவார்கள் ஆனால் பெண்கள் அணியலாமா சந்தேகம் இருக்கிறது ,பெண்கள் கண்டிப்பாக அணியலாம் .எந்தவிதமான தயக்கமும் தேவையில்லை ,பெண்கள் பூப்பெய்தல் என்ற வயதிற்கு வந்த பிறகு இதை அணியலாமா என்றால் தாராளமாக அணியலாம் .

இந்த ருத்ராட்சத்தை எப்போதாவது கழட்டி வைக்கலாமா (அ ) எப்போதும் கழுத்தில் அணிந்திருக்க வேண்டுமோ .மனித வாழ்வில் இயற்கையான சம்பவங்கள் நடைபெறுகிறது .எல்லா காலங்களிலும் இயற்கையான அந்த ருத்ராட்சம் நம்முடைய உடலில் இருப்பது எந்த தடையும் இல்லை .திதி காலத்தில் ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாமா என்றால் ,மரணம் என்பது இயற்கையாக நிகழக்கூடியது ,எனவே அந்த காலத்தில் ருத்ராட்சம் அணியலாம் .

தாம்பத்ய காலத்தில் ருத்ராட்சம் அணியலாமா என்றால் அதுவும் இயற்கையான செயல்தான் ,ஆகவே அந்த நேரத்திலும் ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் .அதில் எந்த விதமான தவறும் கிடையாது .பெண்கள் தீட்டான காலங்களில் ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாமா என்றால் அதுவும் இயற்கை தந்த ஒரு வரம் தான் .அது இருப்பதால் தான் ஒரு பெண்ணால் தாயக மாற முடிகின்றது .எனவே அந்த நேரத்திலும் ருத்ராட்சம் அணித்து கொள்ளலாம் .எல்லாமே இயற்கைதானே நமக்கு எனவே இயற்கையாக இருக்கக்கூடிய எல்லா வகையான காலங்களிலும் இந்த ருத்ராட்சம் நம் உடலில் இருப்பதில் எந்த விதமான தவறும் கிடையாது .

தீட்டுகளை போக்கவல்லது இந்த ருத்ராட்சம் ,எனவே இதற்கு தீட்டு கிடையாது குழந்தை பிறந்த காலத்தில் இதை அணியலாமா என்றால் தாராளமாக அணியலாம், இந்த ருத்ராட்சம் அணிந்து கொண்டால் மது ,மாமிசம் ,புகை பிடிப்பது கூடாது காரணம்  இல்லாமல் அதிகமாக பொய் பேச கூடாது .அதே போல் மாமிசம் உணவுகளை சாப்பிடுபவர்கள் இதை போட்டுக்கொள்ள ஆசை படுவார்கள் ,அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் ,அசைவ உணவு சாப்பிடும் போது ருத்ராட்சத்தை கழட்டி வைத்து விட்டு அடுத்த நாள்  காலையில் குளித்து விட்டு மீண்டும் அதை அணிந்து கொள்ளலாம் .    

 

ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும் ?…

இது ஒரு மதத்தின் உடைய அடையாளமாக ,ஒரு சமயத்தின் உடைய அடையாளமாக காட்டப்படுவதற்கு மட்டும் அல்லாமல் ,நமக்கு உடல் பலம் ,மன பலம் ,ஆரோக்கியம் அனைத்தும் தரக்கூடியது .இந்த ருத்ராட்சத்தை போட்டு கொண்டு குளிக்கும் போது அதன் மேல் பட்ட தண்ணீர் நம்மீது படுகின்ற போது கங்ககை நீரில் குளித்த பலன் நமக்கு கிடைக்கும் .அதனால் இந்த ருத்ராட்சத்தை போட்டு கொண்டு குளிப்பது ஒவ்வொரு நாளும் கங்கையில் நீராடிய புண்ணியத்தை நமக்கு தரும் .

இதைவிட ஒரு பெரிய புண்ணியம் நமக்கு தேவையா என்று யோசித்து பார்க்க வேண்டும் .அறிவியல் ரீதியாக இந்த ருத்ராட்சம் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது .இதை கழுத்தில் போடும் போது அது நம் உடலின் மார்பு பகுதியோடு ஒட்டியபடி இருப்பதால் உடலின் உள்ளே ஏற்படுகின்ற பல்வேறு வகையான நோய்கிருமிகளை அழிக்கின்றது அறிவியல்  ஆராய்ச்சியாளர்கள் நிறைய ஆய்வுகள் செய்து பல விசயங்களை சொல்லி இருக்கிறார்கள் .

அதிகப்படியான டென்ஷன் ,கோபம் ,மனஅழுத்தம் ,சர்க்கரை வியாதி ,இதய நோய்கள் புற்று நோய்கள் ,என பல்வேறு வகையான நோய்களை போக்க வல்லது இந்த ருத்ராட்சம் ,அறிவியல் ரீதியாக இது போன்ற வியாதிகள் வருவதற்கு என்ன காரணம் என்றால் ,நம் மனதில் ஏற்படக்கூடிய எதிர்மறை சிந்தனைகள் தான் இதற்கு முதல் காரணம் என்று சொல்லப்படுகிறது . ஆன்மீக ரீதியாகவும் ,அறிவியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே விசயம் எதிர்மறை எண்ணங்கள் .எதிர்மறை எண்ணங்களை குறைக்ககூடிய தன்மை ,இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால் எதிர்மறை எண்ணங்களையே நம்மிடத்தில் தோன்ற விடாது இந்த ருத்ராட்சம்.

எதையுமே எதிர்மறையாக யோசித்து கொண்டிருந்தால் அது நமக்குள் மன அழுத்தத்தை உண்டாக்கி பல நோய்களுக்கு நம்மை ஆளாக்குகிறது .இந்தருத்ராட்சம் என்ன  என்றால் மன அமைதியை நமக்கு தந்து சமநிலை மனிதனாக  வைப்பதற்கு உதவி செய்கிறது .இதற்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு ,இதை அணிந்து கொள்ளும் போது நமக்குள் ஏற்படும் உள்ளுணர்வினுடைய பதில்கள் மிகவும் சரியானதாக இருக்கும்.

உள்  உணர்வு என்றால் நாம் ஒரு விசயத்தை யோசிக்கின்ற போது அது எப்படி முடியும் என்பதை ஆரம்பத்திலலேயே நமக்கு உணர்த்த கூடியது .உல் உணர்வு சொல்லும் இது சரியாக இருக்கும் ,இதை நாம் செய்யலாம் ,இல்லை இதில் ஏதோ தடங்கல் இருக்கிறது இதை நாம் செய்ய என்பதை நமக்கு முன்கூட்டியே உணர்த்தும். கடைசியில் அந்த முடிவு மிக சரியாக இருக்கும் .அது யாருக்கு வாய்க்கும் என்றால் இந்த ருத்ராட்சம் அணிந்து கொள்கிறவர்களுக்கு உள் உணர்வு  தன்மை மேலோங்கும்

இந்த ருத்ராட்சம் அணிந்து கொண்டு தியானம் செய்தால் நம்முடைய தியானத்தில் சொல்லக்கூடிய ஏழு சக்கரங்கள் ,மூலாதாரம் ,சுவாதிஸ்டானம்,அனாகதம்,விசுக்தி ஆக்ணா ,என்கின்ற ஆறு ஆதாரங்களையும் கடந்து சகஸ்ட்ராகத்தை நோக்கி நாம் பயன்படுகின்ற போது ஒவ்வொரு மண்டலமாக கடந்து நம்முடைய ஆத்ம சக்தியை எடுத்துக்கொண்டு போகக்கூடிய வேகத்தை மிகவும் துரித படுத்தக்கூடிய தன்மை இந்த ருத்ராட்சத்திற்கு இருக்கு.

அதனால் தான் ஞானிகளும் ,மகான்களும் எப்போதும் இந்த ருத்ராட்சத்தை அணிந்து கொண்டே தியானம்,தவம்  செய்வார்கள் . தியானம் செய்கின்ற போது நம்மை ஒருநிலை படுத்துகின்ற தன்மை இதற்கு உண்டு .இதை குழந்தைகள் அணியும் போது அவர்களுக்கு நல்ல ஞாபகசக்தி அதிகரிக்கின்றது உடலுக்கும் ,மனதுக்கும் பல்வேறு வகையான நன்மைகளை வாரி வழங்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆற்றல் படைத்தது இந்த ருத்ராட்சம் .

 

           

ருத்ராட்சத்தின் முகங்களும் அதன் பயன்களும் …

ருத்ராட்சத்திற்கு எத்தனை முகங்கள் இருக்கிறது ,எத்தனை முகங்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் .எல்லா ருத்ராட்சங்களும் பொதுவான பலன்களை தரும் .அதையும் தாண்டி அதீத பலன்களை தரும் .இருந்தாலும் ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு தனிப்பட்ட பலன் இருக்கிறது .

ஏகமுக ருத்ராட்சம் ( ஒரு முகம் )…. இதை பார்ப்பதே அரிதான ஒன்று .இதை தொட்டு வணங்கினாலே நம்முடைய பாவங்கள் போகும் .

இரண்டு முகம்…. இந்த ருத்ராட்சம் அர்த்தநாதீஸ்வரர் ரூபத்திற்கு சமமானது ,இது சந்திர கிரகத்தோடு தொடர்புடையது ,கொடிய பாவங்களை போக்குகின்ற தன்மை இதற்கு உண்டு .செல்வம் ,மனஅமைதி ,குண்டலி சக்தியை எழுப்பக்கூடிய தன்மையும் உண்டு .

மூன்று முக ருத்ராட்சம் …. சோமன் ,சூரியன் ,அக்னி ,என்று சொல்லப்படக்கூடிய முக்கண்ணனுடைய வடிவம் பெற்றது இது .அக்னிக்கு அதிபதியாக விளங்கக்கூடியது செவ்வாய் கிரத்தோடு தொடர்புடையது ,ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை நமக்கு கொண்டு வந்து தரக்கூடியது இந்த மூன்று முக ருத்ராட்சம் .

நான்கு முக ருத்ராட்சம் ….இது பிரம்மாவை குறிக்க கூடியது ,பக்தி ,செல்வம் ,மகிழ்ச்சி ,மோட்சம் ,தரக்கூடியது .அறிவு கூர்மையை மேம்படுத்த கூடியது .இது புதன் கிரகத்தோடு தொடர்புடையது ,இதை கவினர்கள் ,எழுத்தாளர்கள் ,ஓவியர்கள் ,படைப்பாளிகள் ,கல்வியாளர்கள் நுண்கலை வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை அணிந்து கொள்ளலாம் .

ஐந்து முக ருத்ராட்சம் …இது காலாத்மி ருத்ர ரூபத்தை  உடையது என்று சொல்லலாம் இது ஈசானம் ,தற்புருஷம் ,அகோரம் ,வாமதேவம் ,சத்யஜிவாதம் என்ற பஞ்ச முகங்களை கொண்டது .இது குரு கிரகத்தோடு தொடர்புடையது,பொதுவாக இந்த ஐந்து முக ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் .பாவம் தீர்க்கும் சிவ கடாச்சத்தை நமக்கு ஏற்படுத்தும் .உணவுகளில் ஏற்படக்கூடிய விசக்குற்றம் என சொல்லக்கூடியதை நீக்குகின்ற தன்மை இதற்கு உண்டு .

ஆறு முக ருத்ராட்சம் …இந்த ருத்ராட்சம் சண்முக வடிவத்தோடு தொடர்புடையது முருகபெருமானின் வடிவமாக கருத்தப்படக்கூடியது .இது சுக்கிர கிரகத்தோடு தொடர்புடையது .பிரம்மஹத்தி தோஷம் என்ற மிகப்பெரிய தோஷம் போகின்ற அளவிற்கு மிக புண்ணியமானது இந்த ஆறுமுக ருத்ராட்சம் .புகழ் கிடைக்கும் ,புத்தி தெளிவு ஏற்படும் ,மெய் ஞானம் கிடைக்கும் ,பரிசுத்தம் வாய்க்கும் .இப்படி பல சிறப்புகளை கொண்டது .

 

ஏழு முக ருத்ராட்சம் … இது ஆதிசேஷனுடைய அம்சமாக கருதப்படக்கூடியது .சப்த கன்னியர்களின் அருளை பெற்று தரக்கூடியது ,நாக தோஷத்தை நீக்க கூடிய தன்மை இதற்கு உண்டு ,யோக சக்தியை நமக்குள் அதிகமாக பெருக்கக்கூடியது .

எட்டு முக ருத்ராட்சம் ….. இந்த ருத்ராட்சம் அஷ்ட கணபதி விநாயக பெருமானின் அருளை பெற்று தரக்கூடியது ,இது ராகு என்ற கிரகத்தோடு தொடர்புடையது ,இதை அணிந்து கொள்கின்ற போது அஷ்ட வசுக்கள் என்று சொல்லக்கூடியவர்களின் ஆசியும் நமக்கு கிடைக்கும் ,அது மட்டும் அல்லாமல் அஷ்டமா சித்திகளையும் பெற்று தரக்கூடிய தன்மையும் ,அஷ்ட லக்ஷ்மியை நம்மோடு வாசம் செய்யக்கூடிய தன்மையும் இது நமக்கு பெற்று தரும் .

ஒன்பது முக ருத்ராட்சம் .. .இதை நவபைரவர்கள் என்று சொல்லலாம் ( அஷ்ட பைரவர்கள் நம் எல்லோர்க்கும் தெரியும் ) இந்த அஷ்ட பைரவர்கள் தோன்றிய பைரவரை மஹாபைரவர் என்று சொல்லலாம் .அவரை சேர்த்தால் ஒன்பது பைரவர் நவ பைரவர் அருளை தரக்கூடியது இந்த 9-முக ருத்ராட்சம் .கேது என்ற கிரகத்தோடு தொடர்புடையது .பில்லி ,சூனியம் ,ஏவல்  என்று சொல்லப்படுகின்ற இவற்றை நீக்கும் தன்மையும் ,நவகிரக பீடைகளை போக்குகின்ற தன்மையும் ,சித்தி ,முக்தியை பெற்று தரக்கூடிய தன்மையும் இதற்கு உண்டு .இதை கழுத்தை விட இடது மணிக்கட்டில் அணிந்து கொண்டால் அதிகமான பலன்கள் நமக்கு கிடைக்கும் . 

 

பத்து முக ருத்ராட்சம் …. இந்த ருத்ராட்சம் மஹாவிஷ்னுவின் சொரூபமாக சொல்லப்படுகிறது ,இந்த பூத ,பைசாச ,பிசாசுகள் போன்ற பயங்களை போக்கக்கூடியது .ஆபத்துகளை நம்மிடத்தில் இருந்து  நீக்கக்கூடியதும் ,பீடைகளை நீக்கி புண்ணீயத்தை பெற்று தரக்கூடியது .

பதினோரு முக ருத்ராட்சம் …. இதை ஏகாதச ருத்ர  ரூபம் என்று சொல்லவர்கள் .இது அஸ்வமேத யாகம் செய்த பலனையே நமக்கு பெற்று தரக்கூடிய ஒரு உயர்ந்த ருத்ராட்சம் ,சிவஞான சித்தியை நமக்கு தரக்கூடியது .இப்போது 11 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் வரை நமக்கு கிடைக்கிறது .

21 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் நமக்கு அபூர்வமாக கிடைக்கும் ,மொத்தம் 38 வகையான ருத்ராட்சங்களில் இப்போது நமக்கு அபூர்வமாக இவைகள் நமக்கு கிடைத்து கொண்டிருக்கின்றன ,இதில் 1முகம் ,11முகம் ,8முகம் ,7முகம் ,9முகம் இவையெல்லாம் விலை அதிகமாக கொடுத்து நாம் வாங்கி பயன்படுத்த வேண்டும் இவைகள் மிக மிக அரிதாக நமக்கு கிடைக்கக்கூடியது .கௌரிசங்கர்  என்ற ருத்ராட்சம் உண்டு ,இரண்டு ருத்ராட்சங்கள் ஒன்றாக ஒட்டி காணப்படும் .இது அம்மை அப்பன் இருவரும் இணைந்து காணக்கூடிய தோற்றத்தை நமக்கு தருவது .சிவனும் பார்வதியும் நம்முடன் இருந்தால் என்ன பலன் கிடைக்குமோ அத்தனை நலன்களும் இந்த கௌரிஷங்கர் அணிந்து கொள்கின்ற போது நமக்கு கிடைக்கின்றது .

 

எந்த நட்சத்திர காரர்கள் என்ன முகம் உள்ள ருத்ராட்சம் அணிந்தால் என்ன பலன் கிடைக்கும் .

அஸ்வினி நட்சத்திரம் ( 9முகம் ) ,பரணி நட்சத்திரம் ( 6 (அ ) 13முகம் ),கார்த்திகை ( 12முகம் ),ரோகிணி ( 2முகம் ),மிருக சீரிஷம் ( 3முகம் ),திருவாதிரை ( 8முகம்) புனர்பூசம்( 5முகம் ),பூசம் ( 7முகம் ),ஆயில்யம் ( 4முகம் ),மகம் (9முகம் ),பூரம் ( 6முகம் ,13முகம் ),உத்திரம் ( 12முகம் ) ,ஹஸ்தம் (2முகம் ),சித்திரை (3முகம்), ஸ்வாதி (8முகம் ),விசாகம் (5முகம் ),அனுஷம் (7முகம் ),கேட்டை ( 4முகம் ),மூலம் ( 9முகம் ),பூராடம் ( 6(அ ) 13முகம் ),உத்திராடம் (12முகம் ),திருவோணம் ( 2முகம்) அவிட்டம்( 3முகம் ),சதயம் (8முகம் ),பூரட்டாதி ( 5முகம் ),உத்திரட்டாதி (7முகம்) ரேவதி (4முகம் ).போன்ற இந்த ருத்ராட்சங்களை அணிவதன் மூலம் அதீத பலன்களை நம்மால் பெற முடியும் .

இந்த ருத்ராட்சங்களை அணிவதன் மூலம் நம்மிடம் சேரக்கூடிய பாவங்களை நீக்குகின்ற தன்மை இதற்கு உண்டு ,அதனால் தான் அம்பிகை அகிலாண்டேஸ்வரி திருக்கோலத்தில் ருத்ராட்சத்தை தன் திருமேனியில் அணிந்து நமக்கு அருள் புரிகிறாள்.அம்பிகைக்கு ஏது பாவம் என்று கேட்டால் நம்முடைய பாவங்களை எல்லாம் அவள் ஏற்றுக்கொண்டு அந்த பாவம் தன்னிடத்தில் சேராத வண்ணம் இந்த ருத்ராட்சமும்  திருநீறும் தரித்து அம்பாள் நமக்குபுண்ணியத்தை பரிசாக அளிக்க அம்பிகையே இந்த ருத்ராட்சத்தை அணிந்திருக்கிறாள் .இதை நாமே அணிந்து கொள்ளலாம் ,இதை தீக்சை வாங்கி தான் அணிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை .சிவாய நமக என்று சொல்லி சிவனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து அணிந்து கொள்ளலாம் .சிவப்பு கயிரில் தான் கட்ட வேண்டும் ,கருப்பு கயிரில் கட்ட கூடாது .தங்கம் ,வெள்ளி நூல் போட்டும் இதை அணிந்து கொள்ளலாம் .

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam